சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், செப்டெம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு கோரி நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான இலங்கை நீதிச் சேவை சங்கம் (JSASL) மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சைபர் ஆதாரங்களை உருவாக்கிய கணினி சாதனங்களை பரிசோதிக்கும் நோட்டீஸ் பிரதிவாதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சனத் நிஷாந்தவை ஏன் தண்டிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக அவருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவை பிரதிவாதியாக பெயரிட்டு JSASL ஜனாதிபதி நீதவான் பிரசன்ன அல்விஸ், அதன் செயலாளர் மேலதிக மாவட்ட நீதிபதி பசன் மனோஜ் அமரசேன மற்றும் இரண்டு சட்டத்தரணிகளான விஜித குமார மற்றும் பிரியலால் சிறிசேன ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேற்படி குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
ஆகஸ்ட் 23, 2022 அன்று, SLPP கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, நீதியின் உரிய மற்றும் முறையான நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.