உக்ரைனை நேட்டோவில் இணைக்காவிடின் அது அபத்தமானது - அதிபர் ஜெலன்ஸ்கி

தற்போது நேட்டோ மாநாடு இடம்பெறுகையில் அதன் குழுவில் உக்ரைனை இணைக்காவிடின் அல்லது தாமதிப்பின் அது அபத்தமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோபமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டரில் “நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கு தாமதம் ஏற்படுத்துவது அபத்தமானது. இந்தத் தாமதத்தை வைத்து பார்த்தால் உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க தயாராக இல்லை என்று தெரிகிறது”.
2008-ஆம் ஆண்டே நேட்டோவில் உக்ரைன் இணையும் என்று நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், எப்போது என்று அது குறிப்பிடவில்லை. தற்போது வில்னியஸில் நடக்கும் நேட்டோ அமைப்பு நாடுகளின் மாநாட்டில் சில முக்கிய விஷயங்கள் உக்ரைன் இன்றி வாதிக்கப்பட உள்ளதாக எங்களுக்கு அறிகுறிகள் தெரிகின்றன.
இந்த மாநாட்டில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நேட்டோவில் இணைவதற்காக அல்ல. நிச்சயமற்ற தன்மை என்பது பலவீனத்தை குறிக்கும்.
இதுகுறித்து வில்னியஸ் மாநாட்டில் நான் பேச இருக்கிறேன்” என்று கோபமாக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், வில்னியஸ் மாநாட்டில் உக்ரைனுக்கு நல்ல தகவல் கிடைக்கும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜின்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேட்டோவுடன் உக்ரைன் இணையுமா என்ற கேள்விக்கு, “உக்ரைன் நேட்டோவுடன் இணைய இன்னும் தயாராகவில்லை. போர் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைனை நேட்டோ அமைப்புக்குள் கொண்டு வரலாமா, வேண்டாமா என்பதில் நேட்டோ நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து இருப்பதாக தெரியவில்லை.
ரஷ்யாவுடனான போரை உக்ரைன் முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அதன் பிறகுதான் இது குறித்து ஆலோசிக்க முடியும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் உக்ரைன் உடன் போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ அமைப்பு கூட்டாக போரை அறிவிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



