ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதம் அனுப்பிய சாந்தனின் தாயார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதுசெய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரிடம், கடிதம் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை நேற்று முன்வைத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை ஊடாக, ஜனாதிபதிக்கான கடிதத்தையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சருக்கான கடிதத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்ற சாந்தன் உள்ளிட்ட 7 பேரை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்தது. அவர்களில், இலங்கையர்களான சாந்தன், முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணமாகவுள்ள நிலையில் சாந்தனின் தாயார் அவசரமாக இக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இதேவேளை தம்மை இலங்கைக்குள் வர அனுமதிக்குமாறு, இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன