அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரநடவடிக்கைகள் எடுக்கப்படும்

#SriLanka #Student #Susil Premajayantha #Lanka4 #Ministry of Education
Kanimoli
2 years ago
அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரநடவடிக்கைகள் எடுக்கப்படும்

அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். நிலையான மற்றும் தரமான கல்வியை உருவாக்குவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பல சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்காக சர்வதேச தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை அறிமுகம் செய்வதுடன் மனித வளத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா ” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், எமது நாட்டில் 399 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் உள்ளன. 2001 ஆம் ஆண்டு ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, இந்நாட்டில் பதினேழு தேசிய பாடசாலைகளே இருந்தன. ஆனால் ஒவ்வொரு கல்வி அமைச்சரின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது சில அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலோ திடீரென தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் அதன் ஊடாக தரமான கல்வி முறையொன்று தோற்றுவிக்கப்பட்டதாக கூற முடியாது. ஒரே இரவில் 28 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட சகாப்தம் வரலாற்றில் உள்ளது. ஆனால், தற்போது கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. 

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைக்குப் பதிலாக மாணவர்களை மையப்படுத்திய கல்வி முறையொன்று தேவை. அண்மையில் ஏற்பட்ட கொவிட்-19 மற்றும் பொருளாதார தேக்கநிலை காரணமாக, கல்வித்துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைகள் மற்றும் சமூக பிரச்சினைகள் உருவாகியதன் காரணமாக பாடசாலைகளை முறையாக நடத்த முடியவில்லை. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்ய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் வரவில்லை. 

தற்போது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, உயர்தர விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியில் பரீட்சை முடிவுகளை வெளியிடலாம் என நம்புகிறேன். இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கான அனைத்துப் பரீட்சைகளையும் குறித்த காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மேலும், புதிய கல்வி சீர்திருத்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் இணைந்து ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக இதுவரை 13,800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கான பாடப்புத்தகங்களை புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது. தரம் 06 முதல் 09 வரை மற்றும் தரம் 10 முதல் 13 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு பாடத்திட்டங்களை கல்வித்துறையில் உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, Microsoft போன்ற நிறுவனங்களிடமிருந்து தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆதரவைப் பெற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!