கனவில் பாம்பு வந்தால் அதற்குரிய காரணமும் ஜோதிட பரிகாரமும்

#Astrology #spiritual #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
9 months ago
கனவில் பாம்பு வந்தால் அதற்குரிய காரணமும் ஜோதிட பரிகாரமும்

நமக்கு தினமும் பலவிதமான கனவுகள் வருகின்றன. இப்படி வரும் அனைத்து கனவுகளும் பலித்து விடுவதும் இல்லை, பலன் தருவதும் இல்லை. 

எந்த ஒரு கனவு நிஜத்தில் நடப்பது போன்ற உணர்வை தந்து, தூக்கத்தில் இருந்து எழுந்த பிறகும் அந்த தாக்கமும், நினைவுகளும் நம்முடைய மனதில் நிற்கிறதோ அது போன்ற கனவுகள் மட்டுமே பலன் தரும் என சொப்பண சாஸ்திரம் சொல்கிறது. 

இந்த கனவும் நாம் காணும் நேரத்தை பொறுத்து அதன் பலன் மாறுபடும். அதே போல் ஒரே மாதிரியான கனவு அடிக்கடி வந்து கொண்டே இருந்தால் அதற்கு நிச்சயம் பலன் உண்டு.

 அது நல்ல கனவாக இருந்தால் ஒன்றுமில்லை. அதே சமயம் கெட்ட கனவாக இருந்தால் பரிகாரங்கள் செய்து, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

 ஏனெனில் இத்தகைய கனவுகள் நமக்கு எதையே ஒரு விஷயத்தை அல்லது வருங்காலத்தில் நமக்கு வரப் போகும் ஆபத்துக்களை நம்முடைய முன்னோர்கள் அல்லது தெய்வங்கள் நமக்கு முன்கூட்டியே உணர்த்தி, எச்சரிப்பவையாகும்.

 பலருக்கு மிருகங்கள் அடிக்கடி கனவில் வரும். அதே போல் பலருக்கு பாம்புகள் அடிக்கடி கனவில் வரும். ஆனால் பாம்புகள் எல்லோருடைய கனவிலும் வராதாம்.

 யாருக்கும் ஒரு குறிப்பிட்ட தகவலை கொண்டு போய் சேர்க்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தான் பாம்புகள் கனவில் வருமாம். இந்துக்களின் நம்பிக்கையின் படி பாம்பினை தெய்வமாக வழிபடும் வழக்கம் உள்ளது. 

அதனால் பாம்புகள் கனவில் வந்தால் ஆபத்து அல்லது கெட்ட அறிகுறியாகும். ஆனால் விஷ்ணுவின் பஞ்சணையான ஆதிசேஷனோ, சிவனின் ஆபரணமான வாசுகி பாம்போ கனவில் வந்தால் அது மிகவும் நல்ல கனவாகும். 

உங்களின் வாழ்க்கையே மொத்தமாக மாற போகிறது என்று அர்த்தம். அதே சமயம் சாதாரண பாம்புகள் கனவில் அடிக்கடி வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆபத்து, நெருக்கடியான, கஷ்டமான சூழலை நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். 

ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் உங்களுக்கு தீங்கு செய்ய போகிறார் என்று அர்த்தம். சவாலான கால கட்டத்தை உணர்த்தவும் பாம்புகள் கனவில் வரும். அதனால் அது போன்ற கனவுகள் வந்தால் முன்பு இருந்ததை விட நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

 பாம்பு உங்களை கடிப்பது போல் கனவு கண்டால் பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட போகிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் பாம்பு தோலை உறிப்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்வில் நல்லது நடக்க போகிறது.

 நல்ல படியாக உங்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது என்று அர்த்தம். பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது முன்னோர்களின் சாபங்களுக்கு ஆளானவர்களுக்கு தான் அடிக்கடி பாம்பு கனவில் வரும். 

இது போல் பாம்பு கனவில் வராமல் இருக்க பித்ரு தோஷ பரிகாரங்கள் செய்தும், சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவை கொடுத்துள் முன்னோர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களின் ஆசியை பெற முயற்சி செய்ய வேண்டும்.

 ராகு-கேது ஆகிய சர்ப்ப கிரகங்களுக்கு இடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு கிடக்கும் நிலைக்கு கால சர்ப்ப தோஷம் என்கிறோம். இப்படி கால சர்ப்ப தோஷம் உங்களின் ஜாதகத்தில் துவங்கினாலும், ராகு மற்றும் கேது கிரகத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுடைய கனவில் அடிக்கடி பாம்பு வரும். 

இது ஒருவரின் பூர்வஜென்ம கர்மாவின் காரணமாகவே ஏற்படுவதால் உங்களுடைய ஜாதகத்தை பார்த்து அதில் கால சர்ப்ப தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு, அதற்கான நிவர்த்தி பூஜை மற்றும் பரிகாரங்களை செய்து கொள்ளலாம்