ஆடி அமாவாசையில் என்ன தானம் வழங்குதல் சிறப்பு? (மீள் பிரசுரம்)

#ஆன்மீகம்
Mugunthan Mugunthan
9 months ago
ஆடி அமாவாசையில் என்ன தானம் வழங்குதல் சிறப்பு? (மீள் பிரசுரம்)

நம் மூதாதையரை வழிபட மிக உகந்த திதி அமாவாசை திதியாகும். இந்த திதியில் செய்யப்படும் தானம் சகல பாவங்கள், தோஷங்கள் மற்றும் கஷ்டங்களை நீக்கவல்லது.

அதிலும் ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் செய்யப்படும் தானம் மிக உயர்வான பலன்களை நமக்கு தரும். வருடத்தில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய அமாவாசை விரதங்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. 

இந்த நாளில் நீர் நிலைகளில் நீராடி, பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பிறகு, காகத்திற்கு உணவளித்த பிறகு தான் நாம் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஆனால் முன்னோர் வழிபாட்டிற்கு உரிய ஆடி அமாவாசை நாளில் எந்தெந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்? 

எந்த பொருளை தானம் கொடுத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

 பித்ருக்களுக்கு திதி கொடுத்த பிறகு ஏழைகளுக்கு, பசியால் அவதிப்படுபவர்களுக்கு அன்னதானம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

 தானியங்களை தானம் செய்வதால் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணியின் அருள் கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆடி அமாவாசை நாளில் உப்பை தானம் கொடுப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கும். உப்பு, உப்பு கலந்த உணவுகளை தானமாக கொடுப்பதால் இந்த பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

 தானங்களில் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுவது கோ தானம் எனப்படும் பசு தானம். பசுவை தானமாக கொடுப்பதால் பித்ரு சாபங்கள் இருந்தால் நீங்கி விடும்.

 அதே போன்று நாம், நம்முடைய குடும்பத்தார்கள் மட்டுமல்ல ஈரேழு பிறவிகளில் நம்முடைய ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும். ஆடி அமாவாசை நாளில் நீங்கள் பயன்படுத்திய ஆடையோ அல்லது புதிய ஆடைகளையோ வசதி இல்லாத ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

 இதனால் ஆயுள்விருத்தி ஆகும். வேலையில் ஏற்படும் தடைகள் விலகும். குழந்தைகள் சிறு வயதில் இறந்து போவது போன்றவை தடுக்கப்படும். வஸ்திர தானம் எனப்படும் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும்.

 இந்துக்களின் சாஸ்திர முறைப்படி நெய் மிக புனிதமான பொருளாகும். இதை தானமாக கொடுப்பதால் நோய்கள் விலகும். வெண்கலக் கிண்த்தில் சுத்தமான நெய்யை தானமாக கொடுக்க வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம், நோயற்ற வாழ்வு ஆகியவை கிடைக்கும்.

ஆடி அமாவாசையில் எள் தானம் செய்வதும் ஒரு சிறப்பான தானமாகும். எள்ளானது மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுவதால் சகல பாவங்களும் இத்தினத்தில் தானமாக கொடுக்க தீரும். குறிப்பாக சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.