உருத்ராட்சத்தின் மகிமை பற்றி தெரிந்துகொள்வோம்

#God #spiritual #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
9 months ago
உருத்ராட்சத்தின் மகிமை பற்றி தெரிந்துகொள்வோம்

இந்து மதத்தில் உருத்ராட்சம் மிக புனிதமான ஒரு வழிபாட்டுப் பொருள் மட்டுமன்றி அது சிவசின்னங்களிலும் ஒன்றாக திகழ்கிறது. 

 சிவனடியார்கள் மட்டுமின்றி சைவத்தை பின்பற்றும் பலரும் ஆன்மிக பலம் அதிகரிக்கவும், ஜபம் செய்வதற்கும் ருத்ராட்சம் மற்றும் உருத்ராட்ச மாலையை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 இந்த உருத்ராட்சம் எப்படி தோன்றியது, இதற்கும் சிவ பெருமானுக்கும் அப்படி என்ன தொடர்பு என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 உருத்ரன் + அக்ஷ என்ற இரு வார்த்தைகளில் இருந்து உண்டானதே உருத்ராட்சம் என்ற சொல்லாகும். ருத்ரன் என்பது சிவனையும், அக்ஷ என்பது கண்களையும் குறிக்கக் கூடியதாகும்.

 சிவனின் கண்களில் இருந்து தோன்றியது என்பதை குறிப்பதால் உருத்ராட்சம் என்ற பெயர் உருவாயிற்று. ஒவ்வொரு உருத்ராட்ச மணியிலும் சிவ பெருமான் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

இதனால் உருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்து புராணங்களின் படி உருத்ராட்சம், சிவ பெருமானின் கண்ணீர் துளிகளில் இருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.

 கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக போற்றப்படும் சிவ பெருமான் ஆழ்ந்த தியானத்தில் பல காலம் மூழ்கி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு அவர் கண்களை திறந்த போது அவரது கண்களில் இருந்து வழிந்த நீர் துளிகள் பூமியில் விழுந்தது.

 பூமியில் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இந்த கண்ணீர் துளிகள் விழுந்தது. இந்த துளிகள் விருட்சமாக வளர துவங்கின. இவற்றையே நாம் உருத்ராட்ச மரங்கள் என்கிறோம்.

 உருத்ராட்ச மரத்தில் இருந்து முளைத்த காய்கள் சிறிய பெர்ரிகளாக முளைத்தன. இவைகள் முதிர்ந்து, புனிதமான ருத்ராட்ச விதைகள் ஆயின. இந்த உருத்ராட்சங்கள் எம்பெருமான் ஈசனின் கருணையாக கருதப்படுகின்றன.

 இறைவனின் கண்ணீர் துளிகள், பூமியில் மரமாக முளைத்ததால் உருத்ராட்ச விதைகள் தெய்வீக சக்திக்கும், பூமிக்கும் இடையே பந்தத்தை உருவாக்கும் புனித பொருளாக பார்க்கப்படுகிறது.

 ஒவ்வொரு உருத்ராட்சமும் ஆன்மிக சக்தி, தூய்மை, அமைதி, ஞானத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ருத்ராட்ச வடிவில் சிவனே நம்முடன் இருப்பதாக அடியார்கள் கருதுகிறார்கள். 

தெய்வ சக்திக்கும் நமக்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்தும் ஊடகமாக உருத்ராட்சம் உள்ளது. சிவ புராணம், தேவி பாகவதம் உள்ளிட்ட பல புராணங்கள், உருத்ராட்சத்தின் மகிமை, அதன் புனிதத்தன்மை, அதன் சக்தி பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன. 

அதோடு உருத்ராட்ச மணிகள், இறைவன் மனித குலத்திற்கு அளித்த மிகப் பெரிய ஆன்ம பரிசாக கருதப்படுகிறது. இது ஆன்மிக பாதுகாப்பையும், வழிகாட்டுதலையும், தன்னை உணரும் தன்மையையும் இது அளிக்கிறது.

 உருத்ராட்சம் ஒரு முகம், இருமுகம் என பல வகைகளாக சொல்லப்படுகிறது. இவை ஒவ்வொன்றை அணிவதாலும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கின்றன.

 ஐந்து முகங்கள் கொண்ட உருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். அதே சமயம் ஒரு முகம் கொண்ட உருத்ராட்சம் சிவபெருமானுக்கு உரியதாகவும், இரு முக உருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கும், மூன்று முக உருத்ராட்சம் அக்னிக்கும், நான்கு முக உருத்ராட்சம் பிரம்மாவுக்கும், ஐந்து முக உருத்ராட்சம் காலாக்னிக்கும், ஆறு முக உருத்ராட்சம் முருகப் பெருமானுக்கு, ஏழு முக ருத்ராட்சம் உகாமதேவருக்கும், எட்டு முக உருத்ராட்சம் விநாயகருக்கும், ஒன்பது முக ருத்ராட்சம் உபைரவருக்கும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

 பொதுவாகவே உருத்ராட்சத்திற்கு தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை உண்டு என்பதால், உருத்ராட்சத்தை கையில் வைத்துக் கொண்டு சொல்லப்படும் மந்திர ஜபம் மற்றும் முன் வைக்கப்படும் பிரார்த்தனைக்கு பல மடங்கு பலன் உண்டு என சொல்லப்படுகிறது.

எனவே நாம் முன்னர் பிரசுரித்த மந்திரங்களடங்கிய தொகுப்பில் எவற்றை நீங்கள் உங்கள் தேவைக்கேற்றபடி உச்சரிக்க வேண்டுமோ, அவ்வப்போது உருத்ராட்சத்தையும் கையில் வைத்து உச்சரித்து வழிபடுவீர்களானால் உங்களை வேண்டுதலுக்கு உருத்ரன் செவிசாய்ப்பார்.