நெருக்கடி நிலைகளுக்கு சுகாதார அமைச்சரே காரணம் - பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் வைத்தியர்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அமைச்சரே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டில் நிலவி வரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டு நிலைக்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தேசிய மருந்துப் பொருள் அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகவும் அந்த விடயம் அமைச்சருக்கு தெரியும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், மருந்துப் பொருட்களின் தரம் குறைவடைந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு அறையிலிருந்து மற்றுமொரு அறைக்கு ஆவணங்களை கொண்டுசெல்ல குறைந்தபட்சம் 5000 ரூபாய் லஞ்சம் வழங்கவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சரினால் இவற்றை நிறுத்த முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டுமென கூறிய அவர், தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதியினால் கண்பார்வை இழந்த நோயாளிகளுக்கு அரசாங்கப் பணத்தில் நட்டஈடு வழங்கப்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.