தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நிறைவு: பொலிஸார்- போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதம்

#SriLanka #Jaffna #Protest
Mayoorikka
2 years ago
தையிட்டி  விகாரைக்கு எதிரான  போராட்டம் நிறைவு: பொலிஸார்- போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதம்

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.07.2023) மாலை-03 மணியளவில் நான்காம் கட்டமாக ஆரம்பமான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (03.07.2023) மாலை-05.45 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

 முழுநோன்மதி போயா தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மேற்படி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற நிலையிலேயே இன்று திங்கட்கிழமை(03.07.2023) இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.    

 கடந்த பல தடவைகள் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள காணியைப் போராட்டம் நடாத்துவதற்கு வழங்கிய காணியின் உரிமையாளர் பலாலிப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுப் பலாலிப் பொலிஸாரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருந்த காரணத்தால் விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் நேற்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 இரண்டாவது நாளாக இன்று திங்கட்கிழமை காலை முதல் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் விகாரைக்குச் செல்லும் அதே வீதியின் வலது பக்கத்தால் குறித்த விகாரைக்கு இராணுவ வாகனங்கள் செல்வதை அவதானித்த போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் இன்று காலை-10.30 மணியளவில் திடீரென அங்கிருந்து பேரணியாகச் சென்று வீதியோரமாகப் புதிதாகப் போராட்டக் களத்தை ஆரம்பித்துத் தொடர் போராட்டத்தை    முன்னெடுத்திருந்தனர்.

 புதிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட களத்திற்கு விரைந்து சென்ற பலாலிப் பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

 இதனையடுத்துப் பொலிஸ் அராஜகம் ஒழிக! எனப் போராட்டக்காரர்கள் உரத்துக் குரலெழுப்பியதையடுத்து பொலிஸார் போராட்டக்காரர்களுடன் முரண்படுவதைக் கைவிட்டு அங்கிருந்து அகன்றனர். 

இதனையடுத்து இரண்டு பகுதிகளிலும் தொடர்ந்தும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

 இதேவேளை, இன்றைய தினம் இரண்டு பிரிவுகளாகப் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தமையால் குறித்த விகாரைக்குச் செல்வோரின் தொகை சடுதியாக குறைவடைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


images/content-image/2023/07/1688398650.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4