குழந்தை பிறந்தவுடனே தந்தை செய்ய வேண்டிய தானம்

#spiritual #Lanka4 #ஆன்மீகம் #baby #லங்கா4
Mugunthan Mugunthan
9 months ago
குழந்தை பிறந்தவுடனே தந்தை செய்ய வேண்டிய தானம்

ஒரு வீட்டில் திருமணச்சடங்கு மற்றும் இறுதிச்சடங்கு என இரு சடங்கை செய்தால் போதும், நம் வாழ்வில் துன்பம் நிகழாது என்று சொல்லமுடியாது. ஒருவரது வாழ்வில் குழந்தை பிறந்தவுடனும் நாம் குறிப்பிடப்பட்ட சடங்கு செய்யாவிடின் அது தவறு.

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில சடங்குகளைக் குறித்து இப்பொழுது பார்க்கலாம். குழந்தை பிறந்த உடனேயே தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சடங்கு என்று ஒரு சடங்கு சொல்லப்பட்டு இருக்கிறது. ‘‘ஜாத கர்மா” என்பார்கள். 

`ஜாத’ என்றால் பிறந்தவுடன், `கர்மா’ என்றால் செய்ய வேண்டியது என்று பொருள். குழந்தை பிறந்தவுடன் மகிழ்ச்சியோடு பல்வேறு விதமான தானங்களைச் செய்ய வேண்டும். ஸ்ரீராம, லட்சுமணர்கள் பிறந்தவுடன் தசரதன் நிறைய தானம் செய்தான்.

 பொதுவாக ஒருவர், தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்திலும், அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போது, ஏழைகளுக்கும் படித்தவர்களுக்கும் தன்னாலியன்ற தானங்களைச் செய்ய வேண்டும். 

இங்கே படித்தவர்கள் என்பது வேதம் படித்தவர்களைக் குறிக்கும். அறவோர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். அவர்களுக்கு அந்த காலத்தில் தானம்தான் வருமானம். அந்த தானம் செய்வதன் மூலமாக மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். அதனால், குலம் விளங்கும். 

இப்படிப்பட்ட நற்செய்கைகளால் எந்த ஒரு வாழ்வும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். எனவேதான், குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் தந்தை நீராடிவிட்டு, தானம் செய்ய வேண்டும் என்றார்கள்.

 குழந்தை ராத்திரியில் பிறந்தாலும், அந்த ராத்திரி நேரத்திலும் நீராடி விட்டு தானம் செய்யலாம் என்று சாத்திரம் சொல்லுகின்றது. பொதுவாக இரவில் நீராடும் வழக்கம் இல்லை என்று சொன்னாலும்கூட கிரகணக்காலத்திலும் இதைப் போன்ற சந்தர்ப்பத்திலும் நீராடுவது தவறில்லை என்று சாத்திரம் சொல்கின்றது. 

பித்ரு கடன் நீங்கிவிட்டது என்கிற மகிழ்ச்சியில் இந்த தானத்தைச் செய்ய வேண்டும் என்கிறார்கள். எதிர்காலம் என்பது ஒரு சங்கிலித்தொடர். அது அறுபடாமல் வரவேண்டும்.

 அப்படியானால் பிள்ளைகள் பிறந்து வம்சம் விருத்தி அடைய வேண்டும். பிள்ளை பிறந்தவுடன் இந்த பித்ரு கடன் அடைகிறது. அன்றைய தினம் நம் குல முன்னோர்கள், அதாவது பித்ருக்கள் நம் வீட்டை நாடி வந்து தங்கள் சந்ததியை (வாரிசை) ஆசீர்வதித்துச் செல்கிறார்கள். 

ஏதோ ஒரு காரணத்தினால் இந்த சந்ததித் தொடர் அறுபடும் பொழுது, முதலில் அந்தப் பெற்றோர்கள், குழந்தை இல்லையே என்று வருந்துவதைவிட, அந்த குலத்தில் உள்ள பித்ருக்கள் வருந்துகிறார்கள். அந்த வருத்தம் தீரவே தில ஹோமங்கள் முதலிய சாந்தி பிராயச்சித்தங்கள், புனித நதிகளில் நீராடுதல் முதலிய வழிபாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

 தொப்புள்கொடி அறுப்பதற்குள் நாந்தி ச்ராத்தம், தானம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். நாந்தி ச்ராத்தம், நாந்தி சோபனம் என்றெல்லாம் சொல்வது நீத்தார் வழிபாடுதான்.

 சிலர் இது அமங்கலம். மங்கலத்தில் சேராது என்று தவறாகக் கருதுவார்கள். நம் வீட்டில் கல்யாணம், காட்சி என்று எது நடந்தாலும், முதலில் முன்னோர்களிடம் தெரிவித்து ஆசி பெற வேண்டும். பின் தான் குலதெய்வம். 

 இல்லை என்றால் பல இடையூறுகள் வரும். தொப்புள் கொடி அறுக்கும் வரை பிறப்பு தீட்டு வராது என்பதால் உடனடியாக தானம் செய்ய வேண்டும். கோடி கோடியாகச் செய்ய வேண்டும் என்று இல்லை. உங்கள் சக்திக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். நம் மந்திர பிரயோகத்தில் சில நுட்பங்கள் உண்டு. இரண்டு பவுன் வைத்துத் தந்தாலும் சரி, 20 ரூபாய் வைத்துத் தந்தாலும் சரி, இப்படி சொல்லித்தான் தருவார்கள்.

எனவே வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இச்சடங்கை செய்து நம் பித்ருக்களின் ஆசியை பெற்றுக்கொள்வோமாக.