முத்துராஜா யானை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது!
தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்று அழைக்கப்படும் யானை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யானையை ஏற்றிய விமானம் காலை 07.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறபட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து வந்த விசேட விமானம் மூலம் யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகந்தா தெரிவித்தார்.
தாய்லாந்தில் இருந்து இந்நாட்டிற்கு வந்த மூன்று கால்நடை வைத்தியர்கள், ஒரு யானைப் பண்ணையாளர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த விமானத்திற்காக தயாரிக்கப்பட்ட விசேட கூண்டுடன் பழகுவதற்கு "முத்துராஜா" யானைக்கு சுமார் ஒரு மாத காலம் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் திலக் பிரேமகாந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கம் "சக்சுரீன்" என்ற யானையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால் இந்த யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அதனை தாய்லாந்திற்கு அனுப்புமாறு இலங்கை அரசாங்கத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய யானை மீளவும் தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.