போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த புதிய தெரிவுக்குழு நியமனம்!
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த விடயம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) இதனை நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தலைமையில், செயற்படவுள்ள இந்தக் குழு நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகளை ஆராய்ந்து அடையாளம் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக்குழுவில், சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான, புத்திக பத்திரன, கயாஷான் நாவானந்த, துஷார இந்துனில் அமரசேன, உபுல் கலப்பத்தி, மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, அசங்க நவரத்ன, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, தவராஜா கலை அரசன், மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.