பிரான்ஸ் கலவரம் தொடர்கிறது... தற்போது வரை 600 பேர் கைது... ஐ.நா. சமாதானத்திற்கு அறைகூவல்

பிரான்ஸ் தனது காவல் துறையில் ஆழமாக வேரூன்றியுள்ள இனப் பாகுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீஸார் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே கூறும்போது ”போராட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதே முன்னுரிமை. சட்டம் - ஒழுங்கை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கலவரம் குறித்து பாரிஸ் வாசியான மவ்னா கூறும்போது, “நான் 22 வருடங்களாக இங்கு வசித்து வருகிறேன். இம்மாதிரியான வன்முறையை நான் பார்த்ததே இல்லை.
கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். இளைஞர்காள் மற்றும் போலீஸாருக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது” என்றார்.
பிரான்ஸ் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. சபை, “பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸில் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது. பிரான்ஸ் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது



