5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
அக்குரஸ்ஸ நகரில் போலி நாணயத்தாள்களை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அக்குரஸ்ஸ மரம பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபர் 3 போலி 5000 நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் போலி நாணயத்தாள்களை சந்தேக நபருக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலும் பணத்தை கொண்டு வருமாறு அந்த நபர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.
தொலைபேசி அழைப்பின் பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 20 போலி 5,000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்ததையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அஹங்கம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 33 மற்றும் 25 வயதுடைய தொழிலாளர்கள் எனவும், போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் நாணய சுழற்சி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை,இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் சராஸ்ஸ நகரில் 5000 போலி நாணயத்தாள்களை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட போது 7 போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் சாரஸ்ஸ, அஹங்கம ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், தென் மாகாண மக்கள் ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளைஇ கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகவிட்ட பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 500 ரூபா 6 போலி நாணயத் தாள்கள் மற்றும் 50 ரூபா 17 போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்த நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
500 ரூபாயின் 12 போலி நாணயத்தாள்கள், மடிக்கணினி, பணம் அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 28 வயதுடைய பெத்தியகொட மற்றும் கிரிந்திவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.