போர் குற்றம் : ஐ.நாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா!

ரஷ்யா, போரில் குழந்தைகளின் உரிமையை மீறியுள்ளதாக ஐ.நா சபை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை கிரெம்ளின் நிராகரித்துள்ளது.
இது குறித்து நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்ட அறி்க்கையொன்றில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து 800இற்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்யா கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 136 குழந்தைகளைக் கொன்றதாகவும், 518 பேரைக் காயப்படுத்தியதாகவும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது 480 தாக்குதல்களை நடத்தியதாகவும் ரஷ்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை மொஸ்கோ நிராகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், 'எங்கள் இராணுவத்தினர் மீண்டும் மீண்டும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, குழந்தைகளைக் காப்பாற்றவும், ஷெல் தாக்குதலில் இருந்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.



