கிரீஸ் நாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் ஆன மிட்சோடாகிஸ்

கிரீஸ் நாட்டில் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (வயது 55) பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, கடந்த மே 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
300 தொகுதிகளை கொண்ட கிரீஸ் நாட்டில் ஆட்சியமைக்க 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் அங்கு நேற்று மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில், பிரதமர் மிட்சோடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 158 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. மிட்சோடாகிஸ் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சிரிசா கூட்டணி 48 இடங்களை பிடித்தது. 99.70% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மிட்சோடாகிசின் புதிய ஜனநாயக கட்சி 40.55% வாக்குகளை பெற்றது.
சிரிசா கூட்டணி 17.84% சதவீத வாக்குகள் பெற்றது. கடந்த அரை நூற்றாண்டில் கிரீஸ் தேர்தல்களில் இதுவரை காணப்படாத மிகப்பெரிய வெற்றியாகும்.



