போர் குறித்த பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் சென்ற தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்வதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவினருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இன்று உக்ரைன் வந்து சேர்ந்தார்.
கீவ் புறநகர் பகுதியான புச்சா பகுதி ரெயில் நிலையம் அருகே, உக்ரைன் சிறப்பு தூதுவர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூதுவர்கள் அவரை சந்தித்தனர். பிப்ரவரி 2022ல் உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பின் உச்சகட்டமாக, புச்சா பகுதியில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தெருக்களிலும், வெகுஜன புதைகுழிகளிலும் சடலமாக கிடந்தனர்.
அந்த பகுதிக்கு ஆப்பிரிக்க தலைவர் வருகை தந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆப்பிரிக்க தூதுக்குழுவில் ஜாம்பியா, செனகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு மற்றும் கொமோரோ தீவுகள் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
தங்கள் தூதுக்குழுவுடன் தனித்தனியான சந்திப்புகளுக்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக ராமபோசா கடந்த மாதம் கூறியிருந்தார். ரஷியாவின் உயர்மட்ட சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ஆப்பிரிக்க தூத்துக்குழுவினர் இன்று செல்கிறார்கள்.
நாளை புதினைச் சந்திக்க தயாராகி வருகின்றனர்.
ஆப்பிரிக்க தலைவர்கள், சமாதானத்திற்கான முன்னெடுப்புகளைத் தொடங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், ரஷியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான சர்வதேச தடைகளுக்கிடையே ஆப்பிரிக்காவிற்கு மிகவும் தேவைப்படும் உர ஏற்றுமதிகளுக்கு எவ்வாறு பணம் செலுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.