மாலியில் புதைக்கப்பட்ட 20 கிலோ எடையுள்ள பாரிய வெடிகுண்டை கண்டுபிடித்த இலங்கை இராணுவம்
மாலி நாட்டில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தின் இராணுவ வாகன பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குழு பயங்கரவாத அமைப்பினால் புதைக்கப்பட்ட 20 கிலோ எடையுள்ள பாரிய வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மாலி நாட்டில் டெஸ்ஸாலிட் முதல் காவ் வரையிலான தேடுதல் நடவடிக்கையின் போது,இராணுவத்தின் போர் வாகன பாதுகாப்பு பிரிவின் 4வது குழு, பாலைவன மணல் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டை கண்டுபிடித்தது.
அங்கு, அதிக வெடிபொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் சாதனம் கண்டெடுக்கப்பட்டதுடன், அமைதி காக்கும் படையின் வாகனத் தொடரணியை குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் சந்தேகித்துள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதம் 22ஆம் திகதி சமாதான வாகனத் தொடரணி ஒன்று டெஸ்ஸாலிட் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது, வீதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியால் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.