காங்கேசன்துறை கப்பல் பயணிகள் முனையம் இன்று திறப்பு
இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை புதிய கப்பல் பயணிகள் முனையம், இன்று (16) துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீசில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், கப்பல்துறை அமைச்சின் செயலர், துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படைத் தளபதி, கடற்படை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீபால டீசில்வா- காங்கேசன்துறைக்கும், இராமேஸ்வரத்துக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. கப்பல் சேவை ஆரம்பிக்க முன்னர் இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதன் காரணமாக தற்போதைய சூழலில் உடனடியாக கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனினும், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தொடர் முயற்சியின் பயனாக விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்றையதினம் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் ஒரு கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் வந்தடைந்த இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அமைச்சர் அடங்கிய குழுவினர் வரவேற்றதுடன், கப்பலின் கப்டனுக்கு நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது.

