ஊடகங்களை ஒடுக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை; அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
ஊடகங்களை ஒடுக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) கொழும்பில் தெரிவித்தார்.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை மீள வழங்கக்கூடாது என்ற சரத்து எதுவுமில்லை என குறிப்பிட்ட அமைச்சர், அதனை வலியுறுத்தினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் வளர்ந்த ஊடக கலாசாரத்தை உருவாக்குவதற்கு தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதால் சர்வதேச தரத்தில் முறைப்படி இந்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.