ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காஷ்மீரிலும் உணரப்பட்டது!
இன்று காலை, ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.
காலை 10.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 223 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டு அங்கு மையம் கொண்டிருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் இது தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷன் மாகாணத்தில் உள்ள ஜுர்ம் கிராமத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் தென்கிழக்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று காலை 11.19 மணியளவில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலும், ஸ்ரீநகரிலும் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.