சபைக்குள் பாராட்டுக்காக நுழைந்த தம்மிக்க: வெளியேறிய தமிழ் முஸ்லிம் கட்சிகள்
ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணை நேற்று வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணிவரை இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது தம்மிக்க தசநாயக்க படைக்கல சேவிதரினால் காலை 10மணிக்கு சபைக்குள் அழைத்துவரப்பட்டார்.
இதன்போது சபைக்குள் இருந்த பிரதமர். அமைச்சர்கள் உள்ளிட்ட எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று மேசைகளில் தட்டி அவருக்கு வரவேற்பளித்தனர். எனினும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச எழுந்த வெளியே சென்று விட்டார்.
இதனையடுத்து சபைக்குள் அழைத்துவரப்பட்ட தம்மிக்க தசநாயக்க தனது பாராளுமன்ற செயலாளர் நாயகருக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார். அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் உரையாற்றினார்கள்.
எதிர்கட்சித்தலைவரும் நீண்ட நேரத்தின் பின்னர் சபைக்குள் வந்து அவரும் உரையாற்றினார்.
இதன்போது தம்மிக்க தசநாயக்கவின் சேவைகள், திறமைகள் .அர்ப்பணிப்புக்கள் ,சாதனைகள் தொடர்பில் பலரும் பல விடயங்களை முன் வைத்து வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்
.
எவ்வாறு இருப்பினும் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் தமிழ் ,முஸ்லிம். மலையக கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை எனவும் அவர்கள் சபையிலும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.