மலேசியாவில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் உயிரிழப்பு: சந்தேகிக்கும் கணவர்
சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு பணியாற்றிய 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி இரவு மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொபேகனில் வசித்து வந்த 44 வயதுடைய திருமணமான மகலந்தானையைச் சேர்ந்த டொன் ரேணுகா நிலாந்தி பண்டார என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாஎல பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குநர் மூலம் சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுள்ளார்.
இந்தநிலையில், கடந்த 23ஆம் திகதி, வீட்டில் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், வேறு இடத்தில் தற்போது பணியில் இணைந்துள்ளதாகவும் கணவரிடம் அப்பெண் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவர் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் இரண்டாவது மாடியின் ஜன்னலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நேற்று (24) இரவு வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.