2020 ஆம் ஆண்டில் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளன என ஐ.நா. தகவல்
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 1.34 கோடி குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்துள்ளனர், மேலும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன.
குறை பிரசவ குழந்தைகள்' என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வில் கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. இந்நிலையில் 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி ஆகும். இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன. இதில் கடந்த 2020-ல் வங்கதேசத்தில் குறை பிரசவம் அதிகபட்ச அளவாக (16.2%) பதிவாகி உள்ளது. மலாவி (14.5%), பாகிஸ்தான் (14.4%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிரீஸ் (11.6%), அமெரிக்கா (10%) ஆகிய அதிக தனிநபர் வருவாய் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிக அளவில் பதிவாகி உள்ளது. 2020-ம் ஆண்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45% பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.