களுத்துறை பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது
மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை, இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த தனுஷ்க கயான் சபந்து என்ற 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி பிரதேசத்தில் பதுங்கியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் தம்மக சில்வா தலைமையிலான குற்றத் திணைக்கள அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றிவளைத்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 6 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் உயிரிழந்த பாடசாலை மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் அப்பகுதியில் உள்ள விடுதிக்கு வந்துள்ளார்.
பின்னர், தேசிய அடையாள அட்டையை அளித்து, அந்தந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை பதிவு செய்தனர். இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்துவதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.
பின்னர், ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் ஹோட்டலை விட்டு வெளியேறினர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்தனர்.
அப்போது ஹோட்டலுக்கு உணவு எடுக்க வந்த ஒருவர், ஹோட்டலை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
நாகொட பிரதேசத்தில் வசிப்பிடமாகவும் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் களுத்துறை பாடசாலையின் 16 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.