இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்!

#UnitedKingdom #world_news #England
Mayoorikka
3 years ago
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்!

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூடினார்.

 மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

 முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் லண்டனில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

 வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை வண்ண மிகு ஊர்வலம் நடந்தது. மன்னர் சார்லசும், அவரது மனைவியும், ராணியுமான கமீலாவும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். 

இந்த சாரட் வண்டி தங்க முலாம் பூசப்பட்டது சாலையோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின் நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். 

இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது. அதன்பின், மன்னர் 3-ம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

 உறுதிமொழி எடுத்ததும் மன்னரின் தலை மற்றும் உடல் பகுதியில் புனித எண்ணை தேய்த்து அபிஷேகம் நடைபெறும். இந்த எண்ணை மன்னருக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்டதாகும். 

பின்னர் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அவருக்கு அளிக்கப்படும். இந்நிலையில், மூத்த மதகுருமார்கள் புனிதப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு மன்னர் சார்லசுக்கு செங்கோல் வழங்கப்பட்டு ஆர்ச் பிஷப் அவரது தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூட்டி தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் அமர வைத்தார். 

அவரது மனைவி கமீலா சார்லசுக்கும் கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் 1953-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 முக்கிய தலைவர்கள், 203 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மற்ற நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 இந்த விழாவில் இந்து, சீக்கியம், முஸ்லீம், புத்தமதம், ஜெயின் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களும் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொலிசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4