யாழ்ப்பாண மாவட்டத்தில் நூதன திருட்டு: முச்சக்கரவண்டி சாரதிகளின் கவனத்திற்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிகள் போல பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (04) பகல் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் பருத்தித்துறையில் இருந்து முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.
கீரிமலையில் உள்ள காணிகளை பார்ககவென கூறிய அவர்கள், முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
அதே நபர்கள் மற்றொரு முச்சக்கர வண்டியை கீரிமலையில் இருந்து வாடகைக்கு அமர்த்தி பருத்தித்துறைக்கு செல்லும் வழியில் அந்த சாரதிக்கும் குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கீரிமலையில் மயக்கமடைந்த முச்சக்கர வண்டி சாரதி தெல்லிப்பழை வைத்தியசாலையிலும், மற்றையவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் இவ்வாறு திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் முச்சக்கரவண்டி சாரதிகள் இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்காது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



