பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தரை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?

#Hindu #God #spiritual #Tamilnews
Prasu
3 years ago
பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தரை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?

ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி வந்து போய்க் கொண்டிருந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. நாம் பூலோகத்தில் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் தான் ‘சித்திரகுப்தர்’ என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். 

எமலோகத்தில் இருந்து கொண்டு நம்மை வேவு பார்க்கும் சித்திர குப்தரின் அருள் பெற இன்றைய நாளை தவறவிட்டு விடக்கூடாது!

சித்ரா பௌர்ணமி வழிபாடு முறையாக செய்வது எப்படி? அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன.?

பார்வதி தேவி தன்னுடைய பொற்பலகையில் சித்திரங்களை வரைந்து கொண்டிருந்தாராம். அப்பொழுது அதில் இருக்கும் சித்திரம் மிகவும் அழகான தோற்றம் உள்ளதை பார்த்த சிலர், இந்தச் சித்திரம் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? என்று பேசிக் கொண்டனர். 

இதனை கேட்ட பார்வதி தேவி சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அதில் இருந்து தோன்றியவர் தான் இந்த சித்திர புத்திரன். ஆனால் நாளடைவில் மருவி சித்திரகுப்தன் என்கிற பெயர் ஏற்பட்டுவிட்டது.

கேது பகவான் உடைய அதி தேவதையாக இருக்கும் சித்திரகுப்தர் கேது தோஷங்களையும் நீக்கக் கூடியவர். ஒருவருடைய சுய ஜாதகத்தில் கேது நீசம் பெற்று இருந்தாலும், கேது தோஷம் இருந்தாலும் அவர்கள் இந்த சித்ரா பௌர்ணமி வழிபாட்டை செய்தால் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். கேது தோஷம் இருப்பவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகி விடுவார்கள். தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பவர்கள் சித்ரகுப்தரை வழிபட்டு நன்மைகளை பெறலாம்

சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தரை நினைத்து புதிதாக நோட்டு புத்தகம் மற்றும் பேனா ஒன்றை வாங்க வேண்டும். அதில் ‘சித்திரகுப்தர் படி அளக்க’ என்கிற வார்த்தையை முதலில் எழுதி மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். 

அவரை வணங்கும் பொழுது ‘நான் கடுகளவு செய்த புண்ணியங்களை மலை அளவாகவும், மலையளவு செய்த பாவங்களை கடுகளவும் செய்க!’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

சித்ரா பௌர்ணமியன்று சித்திர குப்தரை வழிபடுபவர்களுக்கு சித்திரகுப்தர் நல்வழி காட்டுவார். ஒரு ஊரில் புண்ணியமே செய்யாத ஒருவர் இருந்தாராம். அவர் சித்ரகுப்தனை வழிபட்டு தான் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் அதற்கு ஏதாவது ஒரு வழி கூறுங்கள் என்று வேண்டிக் கொண்டாராம். புண்ணியமே செய்யாமல் எப்படி சொர்க்கத்திற்கு செல்ல முடியும்? அதற்கு சித்ரகுப்தர் ஒரு வழியைக் கூறினார்.

உன்னுடைய நிலத்தில் கிணறு ஒன்றைத் தோண்டி அதில் பசு மாடுகளை தண்ணீர் குடிக்க வை! என்று கூறினாராம். அவனும் அதே போல செய்து பசுமாட்டை தண்ணீர் குடிக்க வைத்தானாம் ஆனால் அந்தக் கிணற்றிலிருந்து சிறிதளவே ஊற்று ஏற்பட்டதால் ஒரு மாடு மட்டுமே தண்ணீர் குடித்தது. உடனே அவன் உயிர் பிரிந்தது. எமலோகத்தில் யமதர்ம ராஜா புதிதாக எமலோகம் வந்திருக்கும் இவனின் பாவ, புண்ணிய கணக்கை சரிபார் என்று சித்திரகுப்தருக்கு கட்டளையிட்டார்.

அதன்படி அவன் செய்த கடுகளவு புண்ணியத்தை மலை அளவாக எம ராஜாவிடம் கூறிவிட்டார். ஆனால் அவன் தோண்டிய கிணற்றில் இருந்து சிறிதளவே ஊற்று வந்ததால் பெரிதாக புண்ணியம் சேராது என்று கூறி சுமார் ஒன்றரை மணி நேரம் வரை சொர்க்க வாசம் செய்ய அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் சிறிது நேரத்தில் அந்த கிணற்றில் இருந்து ஊற்று அதிகமாக பெருக்கெடுத்து நிறைய மாடுகள் வந்து தண்ணீர் குடித்தது. இதனால் அவனுடைய புண்ணியக் கணக்கும் அதிகரித்து நிரந்தரமாக சொர்க்க வாசம் புரிந்தான்.

இப்படி சித்ரகுப்தரை வழிபடுபவர்களுக்கு அவர் நிறையவே நன்மைகளை நமக்கு செய்து விடுவார் என்பதில் ஐயமில்லை. சித்ரா பௌர்ணமி அன்று பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் குடும்பத்துடன் அமைந்து சித்ரான்னம் எனப்படும் கலவை சாதங்களை சாப்பிட வேண்டும். 

ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் இருப்பவர்கள் அதன் அருகாமையில் அமர்ந்து இவ்வாறு செய்வது மிகவும் நல்லது. அப்படி முடியாதவர்கள் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பௌர்ணமியில் நிலவின் கதிர் வீச்சுகளை உள்வாங்கி மனதார சித்ரகுப்தரை வணங்கி குடும்பத்துடன் உணவு உண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அன்றைய நாளில் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை வாங்கி தானம் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4