அச்சடிக்கும் இயந்திரங்கள் தட்டுப்பாடு: சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் தாமதம்

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தில் அச்சடிக்கும் இயந்திரங்கள் தட்டுப்பாடு காரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை எதிர்பார்த்துள்ள சுமார் 08 இலட்சம் பேருக்கு உரிய முறையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியவில்லை.
வெரஹெர அலுவலகத்தில் அட்டைகளை அச்சிடுவதற்கு 09 இயந்திரங்கள் இருந்தாலும், 04 இயந்திரங்களைக் கொண்டே அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.
தற்போதுள்ள இயந்திரங்கள் மூலம் அச்சிடப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள இயந்திரங்களை சீர் செய்வதை விட குறைந்த விலையில் 06 புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய முடியும் என்பதால் அதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், தற்போதுள்ள இருப்புகளை பூர்த்தி செய்வதற்கு சுமார் 06 மாதங்கள் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் சுமார் 2000 அட்டைகளை அச்சடித்து வருவதால், கூடிய விரைவில் புதிய இயந்திரங்களை கொண்டு வர முடியும் என நம்புவதாக நிஷாந்த மேலும் தெரிவித்தார்.



