திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

#Temple #ஆன்மீகம் #ஆலயம்
Mani
1 year ago
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து  அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது.  சிறப்பு பூஜைகளுடன் காலை 5.45 மணிக்கு மீனலக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு  யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.