இன்றைய வேத வசனம் 16.03.2023: ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்

#Bible #Holy sprit #today verses #spiritual #Lanka4
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 16.03.2023: ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்

ஒரு மனிதன் வெகு தொலைவில் இருந்து நடந்து வருகையில், பாலைவனப் பகுதி ஒன்றில் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது தான் கொண்டுவந்த தண்ணீர் தீர்ந்து போனபடியால் மிகுந்த தாகத்துடன் நா வரண்டு. தண்ணீர் கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் சென்று கொண்டிருந்தார்.

ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் கிடைப்பதற்குண்டான அறிகுறிகளே தென்படவில்லை.
மிகுந்த சோர்வுடன் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மனதில் இருந்த வலிமை, அவருடைய சரீரத்தில் இல்லை.

கால்கள் தள்ளாட ஆரம்பித்தது. முன்னோக்கி நடந்தாலும் நடையின் வேகம் குறைந்து. பின்னோக்கி நடப்பது போல அவருக்கு தெரிந்தது. இருந்தாலும் வேறு வழியின்றி பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்.

சிறிது தூரம் சென்றதும், தூரத்தில் அவருடைய கண்களுக்கு தண்ணீர் குழாய் ஒன்று தென்பட்டது. அப்போதுதான் அந்த மனிதரின் சோர்வான முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.

முன்பைவிட சற்று வேகமாகவே அவருடைய நடை காணப்பட்டது. வெகு நேரமாக எதிர்பார்த்து கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியினால்தான்.

ஒரு வழியாக தண்ணீர் குழாயின் அருகில் வந்து, ஆவலோடு குழாயை அடித்தால் தண்ணீர் வரவில்லை, காற்று மட்டுமே வருகிறது.

ஏனென்றால் தண்ணீர் கீழே இறங்கி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு சற்று நிம்மதி வந்தது.
அந்த குழாயின் அருகிலேயே ஒரு பாட்டில் தண்ணீர் இருந்தது. அந்த தண்ணீரை குடிக்கலாம் என்று எடுத்தவருக்கு மேலும் அதிர்ச்சி.

என்ன காரணம் என்றால் அந்த பாட்டிலில் "இந்த தண்ணீரை எடுப்பவர்கள் இதை குடிக்க வேண்டாம். அருகில் இருக்கும் குழாயில் ஊற்றி, குழாயை அடித்தால் தண்ணீர் வரும். அப்போது உங்களுக்கு வேண்டிய தண்ணீரை குடித்துவிட்டு போதுமான அளவு நீங்கள் எடுத்துக் கொண்டு, மீண்டும் இந்த பாட்டிலில் தண்ணீரை நிறைத்து வைத்துவிடுங்கள். 

உங்களைப் போல இந்த வழியாக வருபவர்களுக்கு இது பயன்படும்" என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும் அந்த மனிதருக்கு சோர்வோடுகூட குழப்பமும் வந்துவிட்டது. "என்னுடைய கரத்தில் எனது தாகத்திற்குப் இருக்கும் தண்ணீரோ போதுமானது அல்ல.

இருந்தாலும் கிடைத்தவரைக்கும் சந்தோஷம் என்று குடிக்கலாம் என்றாலும் இதில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் என்னைத் தடுக்கிறது.

இதில் எழுதப்பட்டிருப்பது போல இந்த குழாயில் தண்ணீரை ஊற்றி அடிக்கும்போது ஒரு வேளை தண்ணீர் வராமல் போய்விட்டால் நம்முடைய நிலை மேலும் திண்டாட்டமாகிவிடும்.

இதற்கு மேலும் தண்ணீர் குடிக்காமல் நடப்பதற்கு உடம்பில் தெம்பு இல்லை.
இருக்கும் இந்த தண்ணீரை குடித்தாலாவது கொஞ்சம் களைப்பு நீங்கி, தொடர்ந்து பயணம் செய்யலாம் என்ன செய்வது?' என்று மிகுந்த யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்து, "இந்த தண்ணீர் கூட இன்னொருவர் நமக்காக நிரப்பி வைத்ததுதானே.

அதுபோல நாமும் ஏன் செய்யக்கூடாது' என்று எண்ணி, தெளிவோடு குழாயில் அந்த பாட்டில் தண்ணீரை ஊற்றி, பின்பு அடிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் குழாயிலிருந்து தண்ணீர் வர ஆரம்பித்தது. அவருக்கு மிகுந்த சந்தோஷம். தன்னுடை தாகம் தீர தண்ணீரை அள்ளி பருகினார்.

மேலும் தன்னுடைய பயணத்திற்கு தேவையான தண்ணீரையும் எடுத்துக்கொண்டு, முன்பு இருந்தது போல அந்த பாட்டிலிலும் தண்ணீரை நிறைத்து வைத்துவிட்டு, தனது பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தார்.
ஒருவேளை. தனக்கு கிடைத்த பாட்டில் தண்ணீர் முழுவதையும் அவரே குடித்திருந்தால் அவருக்கும் போதுமானதாக இருந்திருக்காது. இந்த பகுதிக்கு வரும் மற்றவர்களுக்கும் தண்ணீர் கிடைத்திருக்காது.
இதேப் போலத்தான் நாமும் நம்முடைய வாழ்வில் எதுவும் நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கும் நிலை காணப்படுகிறது.

அதற்கு காரணம் தனக்கு ஆண்டவர் கொடுக்கும் பொருளை, செல்வத்தை திக்கற்றவர்களுக்கும் எளியோருக்கும் மனதார கொடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனநிறைவு கிடைக்கும்.
இதையே இயேசு தன்னுடைய உபதேசத்தில் ""கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் உங்கள் மடியிலே போடுவார்கள்;
நீங்கள், எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்." (#லூக்கா 6:38)

ஆகவே, இந்த உலகில் நாமும் திக்கற்றவர்களுக்கு, உணவின்றி தவிப்பவர்களுக்கு மனமுவந்து நல்ல மனதோடு கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கல்வி கற்க இயலாத குழந்தைகளுக்கு கல்விக்கு தேவையான உதவிகளை நாம் செய்ய வேண்டும்.
குருடர்களுக்கு கண்களாகவும் முடவர்களுக்கு கால்களாகவும் நாம் இருக்க வேண்டும்.
உலகத்தான் சேர்த்து வைப்பான்.

கிறிஸ்தவன் கொடுத்துப் பூரிப்பான்.
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (#நீதிமொழிகள் 19:17)