மருத்துவர்களின் வேலை நிறுத்தம்: இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 4 மாகாணங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக வெளிநோயாளர் பிரிவுகளிற்கு சிகிச்சைக்காக சென்ற மக்கள் பல கஷ்டங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.
மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய 04 மாகாணங்களில் வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தமது வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.கே.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
களுபோவில மற்றும் ராகம போதனா வைத்தியசாலைகளின் மருத்துவ மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளும் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவப் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பணிப்பகிஷ்கரிப்பு நடைபெற்று வரும் கிழக்கு மாகாணத்தில் பல வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பல வைத்தியசாலைகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிகிச்சைக்காக சென்று அங்கு சிகிச்சை கிடைக்காத நிலையில் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



