மோடி பாகிஸ்தானை ஆட்சி செய்தால் நியாயமான விலையில் பொருள்களை பெற்றுக்கொள்ளமுடியும் - பாகிஸ்தான் நபர் பேட்டி

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டு, பாகிஸ்தான் யூடியூபர் சனா அம்ஜத் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பத்திரிகையாளரான சனா அம்ஜத் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், பாகிஸ்தான் இளைஞர் ஒருவர், தற்போது நாட்டில் நிலவும் விவகாரங்கள் குறித்து ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பேசுவதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை ஆட்சி செய்தால் நியாயமான விலையில் பொருட்களை வாங்கியிருக்க முடியும் என்று கூறுகிறார்.



