அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்திவைத்த ரஷ்யா

அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது.
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்தார்.
அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.
ரஷியாவின் இந்த முடிவு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறியதாவது:- புதிய தொடக்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தொடர்பான ரஷியாவின் அறிவிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற செயல்.
ஆனால் ஆயுத கட்டுப்பாடுகள் குறித்து ரஷியாவுடன் பேச அமெரிக்கா தயாராக உள்ளது. ரஷியா உண்மையில் என்ன செய்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்போம். எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக நாங்கள் சரியான நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்கா, ரஷியா இடையே 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும்.
ஆனால் அது சமீபத்திய ஆண்டுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரஷியா நடந்துகொள்ளவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது.



