யாழ் கலாச்சார நிலையத்தை மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

#SriLanka #India #Jaffna #Hindu #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
யாழ் கலாச்சார நிலையத்தை மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ். மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் எனவும்  அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐந்து ஈச்சரங்களையும் தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து இந்து மக்கள் கட்சியினர் வருகை தந்த நிலையில், யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தார்,

இந்தியா - இலங்கைக்கும் இடையேயுள்ள உறவு புராண, இதிகாச வரலாற்றுச் சிறப்புமிக்க உறவு. இந்த உறவை மேம்படுத்த வேண்டும்.

இதற்காகத் தான் சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா இலங்கைக்கும் இந்தியாவிற்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க வேண்டும் என 10 வருடங்களாக வலியுறுத்தி வந்தார்.

அதேபோல் இத் திட்டம் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. விமானப் போக்குவரத்தும் இரு நாடுகளுக்குமிடையே அண்மையில் ஆரம்பமாகியுள்ளது.

பாரதப் பிரதமர் மோடி யுத்தத்திற்கு பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000க்கு மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்கொடுத்து நேரடியாக பால் காய்ச்சும் நிகழ்வில் பங்கெடுத்து, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் பாரதப் பிரதமர் என்ற தடத்தையும் பதித்திருந்தார்.

தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உதவிகளை அனுப்பினார். அத்தோடு சமீபத்திலும் கலாசார மண்டபம் இந்தியா அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந் நிலையிலே நாம் இரு நாட்டுக்கிடையேயுள்ள தொப்புள் கொடி உறவை மேம்படுத்த வேண்டும். பாரத நாடு எப்பொழுதும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க நினைத்ததில்லை.

உதவி செய்வதை தவிர, ஏனைய நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடுவதில்லை.

இரு நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், மத வெறியர்கள் மற்றும் சதிகாரர்களை போன்றவர்களைப் புறந்தள்ளிவிட்டு இரு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கை இந்தியாவுடன் பின்னிப் பிணைந்த நாடு. இது குபேரன், இராவணன் போன்றோர் ஆண்ட நாடு. தற்சமயம் இரு நாடுகளின் இராட்சியங்கள், அரசியல் மற்றும் அரசுகள் வேறுபட்டாலும் நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.

தற்போது இங்கு மோசடி, மத மாற்றம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. உதாரணமாக திருக்கேதீச்சரத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் போன்றனவற்றை குறிப்பிடலாம். இவற்றுடன் ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்ற மத பயங்கரவாதம் கடந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிட முடியும்.

சீனா கட்டிக்கொடுத்த கலாசார மையத்தை தன் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கின்றது. மாறாக இந்திய அரசாங்கத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட கலாசார மண்டபமானது இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த கலாசார மண்டபத்தை யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் இரு நாடுகளு்குமிடையிலான கலாசார ரீதியான உறவுகளை மேம்படுத்த முடியும்.

திருக்கேதீச்சரத்தில் தோரணவாயில் அமைக்கப்பட வேண்டும். திருக்கோணேச்சரம் இராவண வரலாறு போன்றன மீளக் கட்டமைக்கப்பட வேண்டும். திருகோணேச்சர ஆலயம் தொடர்பாகவும் அங்கு தொல்லியல் திணைக்களத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

ஈழத் தமிழர்களுக்காக இந்தியா தொடர்ந்தும் குரல் கொடுக்கவும், செயற்படவும் தயாராக இருக்கின்ற நிலையில், 13ஆம் திருத்தம் தொடர்பில் சிலர் அறியாமல் பேசுகின்றனர். 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என  தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!