70 வயதிலும் பன்ன வேலையில் அசத்தும் யாழ்ப்பாண முதியவர்!

வயதாகிவிட்டதே, உடல் தளர்ந்துவிட்டதே என்றெல்லாம் நினைக்காமல், சுயதொழில் உற்பத்தியில் ஈடுபடுகிறார் யாழ்ப்பாணம் காரைநகரில் வசிக்கும் 70 வயது முதியவர்.
பனையில் இருந்து கிடைக்கக்கூடிய ஓலை, ஈர்க்கு, நார், மட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி, ஓலைப் பெட்டிகள், கடகங்கள், தட்டைப் பெட்டி, நீர்த்துப் பெட்டி, திருகணை போன்றவற்றை இவர் உருவாக்குகிறார். இதை ‘பன்ன வேலை’ என்று அழைப்போம்.
மேலும் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு நிறங்களில் ‘பின்னல் பெட்டிகளையும்’ இவர் இழைக்கிறார். திருமணத்தின் போது ‘நாலாம் சடங்கில்’ பலகாரங்களை எடுத்துச் செல்ல இவ்வகைப் பெட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் கூறைச்சேலை, தாலி போன்றவற்றை எடுத்துச்செல்ல பயன்படும் ‘அலங்காரப் பெட்டிகளும்’ இவரது கைவண்ணத்தில் உருவாகின்றன.
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கலைவேலைப்பாடுகள் நிறைந்ததுமான இந்த பனையோலைப்பெட்டிகளை இழைப்பதன்மூலம் அவருக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. வயதான காலத்தில்கூட யாரையும் நம்பியிராமல், தனது உழைப்பைமட்டும் நம்பிவாழும் இவரின் பெயர் செல்லைய்யா கந்தசாமி.
பனையோலைப் பெட்டிகளில் கூறைச்சேலை, தாலிகளை எடுத்துச் செல்வது அந்தக்கால வழக்கமாக இருந்தாலும் அதைநாம் மீளவும் கொண்டுவந்து, Trend ஆக்க முடியும். வெளிநாடுகளில்வாழும் நாம், தாயக உற்பத்திப்
பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டும்.
இதன்மூலம் எமது பாரம்பரியத்தை கட்டிக்காப்பதோடு, கந்தசாமி போன்ற உழைப்பாளிகளின் வாழ்வில் ஒளியேற்றியதாகவும் இருக்கும்.
தாயகத்தின் இவர்போல மேலும் பல உழைப்பாளிகளும் சுயதொழில் முனைவோரும் இருக்கிறார்கள். இவர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஒன்றுசேரும்போது அங்கு பெரும் பொருளாதாரப் புரட்சியே நிகழும். இதன் முதல்கட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது.
‘பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை'.



