இன்று மாலை 6.24மணிக்கு மகா சிவராத்திரி விரதம் தொடங்குகிறது.

#ஆன்மீகம் #சிவபெருமான் #இன்று #தகவல் #லங்கா4 #spiritual #God #today #information #Lanka4
இன்று மாலை 6.24மணிக்கு மகா சிவராத்திரி விரதம் தொடங்குகிறது.

பார்வதி தேவியாருக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி, அது போல் சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்பது பலருக்குத் தெரியும். சிவனுக்குரிய விரதங்களில் முக்கியமானது சிவ ராத்திரி. இது இன்று பிறக்கிறது. இந்த சிவராத்திரி தினத்தன்றே சிவனும் பார்வதி தேவியாரும் திருமணம் செய்த நாளாகும். இதனாலேயே மகா சிவராத்திரி என அழைக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் பால்குண மாதத்தின் கிருஷ்ணபட்சம் சதுர்தசி அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி படி, பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திலும், தமிழ் மாதப்படி மாசி மாதத்திலும் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து, இரவில் கண் விழித்து, சிவ வழிபாடு செய்தால் பாவங்கள் தொலைந்து, மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். சிவ பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சிலர் மகா சிவராத்திரியன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பார்கள். இன்னும் சிலர் இரவு முழுவதும் கண் விழித்து, மறுநாள் காலை வரை உணவு உண்ணாமல் விரதம் இருப்பார்கள்.

நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். மகா சிவராத்திரியன்று சிவ பெருமானுக்கு ஆறு கால பூஜைகள் முதல் நாள் துவங்கி, மறுநாள் வரை நடைபெறும்.

2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ம் தேதி (மாசி 06) சனிக்கிழமை இன்று வருகிறது. இன்றைய தினம் சிவ பெருமானுக்கு உரிய பிரதோஷமும் கூட. மகா சிவராத்திரியுடன் கூடிய சனி மகா பிரதோஷம் என்பதால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி அதீத சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்றைய தினம் பெருமாளுக்கு உரிய திருவோணம் விரதமும் சேர்ந்து வருகிறது.

சதுர்த்தசி திதியே சிவராத்திரி காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 18 ம் தேதி இன்று மாலை 06.24 மணி துவங்கி, பிப்ரவரி 19 ம் தேதி மாலை 04.03 வரை உள்ளது. அதற்கு பிறகு அமாவாசை திதி துவங்குகிறது. பிப்ரவரி 18 ம் தேதி மகா சனிப்பிரதோஷம் என்பதால் பகல் 3 மணிக்கே சிவ வழிபாட்டை துவங்கி விடலாம்.

பிப்ரவரி 18 ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகே சதுர்தசி திதி துவங்குவதால் அன்று பகல் பொழுதில் இருந்து விரதத்தை துவங்கி, பிப்ரவரி 19 ம் தேதி மாலை சிவ பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். இரவு கண் விழிக்காமல், ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க நினைப்பவர்கள் பிப்ரவரி 19 ம் தேதி காலை விரதத்தை துவங்கி, பகல் 3 மணிக்கு விரதத்தை நிறைவு செய்யலாம்.

என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?

இரவு முழுவதும் கண் விழித்து சிவ புராணம் படிக்கலாம். சிவனுக்குரிய பாடல்கள், மந்திரங்கள் தெரிந்தால் பாராயணம் செய்து சிவனை வழிபடலாம். முடியாதவர்கள் அமைதியான இடத்தில் அமர்ந்து ஓம் நம சிவாய மந்திரத்தை தொடர்ந்து ஜபித்துக் கொண்டே இருக்கலாம்.

இரவு முழுவதும் கண் விழித்து கோவில்களில் நடக்கும் மகா சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சிவ பூஜை செய்து, சிவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபடலாம். வில்வ இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பாயசம், பொங்கல் போன்று ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்து படைக்கலாம்.

இப்போதே தயாராகுங்கள் மகாசிவராத்தியில் விரதம் அனுஷ்டிப்பதற்கும் சிவனின் அனுக்கிரகம் உங்களை வந்தடையவும்.