இலங்கைக்கு வந்து சென்ற அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கள் குறித்து வெளியாகாத தகவல்

இலங்கைக்கு வந்து சென்ற அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கள் குறித்து இன்னும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட 29 பேர் கொண்ட தூதுக்குழு, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு வந்த நிலையில் சந்திப்புக்களின் பின்னர் நேற்று புதன்கிழமை இலங்கையை விட்டு வெளியேறியுள்ளது.
சி-17 குளோப் மாஸ்டர்கள் என்று கூறப்படும் இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த குழுவில் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி செயலாளர் ஜெடிடியா ரோயலும் அடங்கியிருந்தார்.
இதேவேளை இந்த விஜயம் குறித்து கருத்து தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
இலங்கை, அமெரிக்க நட்பு நாடான இந்தியாவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை கொண்டுள்ளது.
அதேநேரம் வோஷிங்டன், கொழும்புக்கும் பீய்ஜிங்கிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை விரும்பாத கொள்கையை கொண்டுள்ளது.



