உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரையில் உருவத்தை மாற்றிகொண்டே இருக்கிறது. அந்தவகையில் இப்போது XBB.1.5 உருமாறிய வைரஸ் உலகை மிரட்ட தொடங்கியிருக்கிறது.
இது ஏற்கனவே உருமாற்றம் கண்ட ஒமிக்ரோனின் இரண்டு வெவ்வேறான பிஏ. 2 துணைப் பிரிவுகளின் இனக்கலப்பு வைரஸ் ஆகும். இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானி எரிக் டோபோல் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் உலகம் முழுவதும் 38 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பில் 82 சதவீதமும், பிரிட்டனில் மொத்த பாதிப்பில் 8 சதவீதமும் XBB.1.5 உருமாறிய வைரசால் ஏற்பட்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 11 மாநிலங்களில் XBB.1.5 வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரையில் 26 பேருக்கு XBB.1.5 உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மற்ற வகை வைரஸ்களைவிடவும் XBB.1.5 வைரஸ் 12.5 சதவீதம் வேகமாக பரவுகிறது என ஐரோப்பிய யூனியனின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸ் குறித்து ஆய்வு செய்திருக்கும் நியூயார்க் சுகாதாரத்துறையும், இதே தகவலை தெரிவித்துள்ளது. XBB.1.5 உருமாறிய வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களையும் தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



