நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் பொதுமக்களின் பார்வைக்காக

இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகுதிகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தியுள்ளனர்.
இதில்,225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களின் கல்வித் தகுதி அல்லது தொழில் தகுதிகள் அல்லது இரண்டையும் நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற அதிகாரிகள் முதலில் தகவலை வெளியிட மறுத்ததை அடுத்து, தகவல் அறியும் உரிமை ஆணையம் அந்த தகவலை வெளியிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவல்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்ட போதிலும் யாரும் அதனை சமர்ப்பிக்கவில்லை.
இந்தநிலையில் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள உறுப்பினர்களின் கல்வித்தகமை விபரங்களை நாடாளுமன்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்க்கமுடியும்.
எனினும் இணையத்தள தரவின்படி, கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளை 27 உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலகத்திற்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர்.
சாமர சம்பத் தசநாயக்க, தம்மிக பெரேரா, கெவிந்து குமாரதுங்க, ஜகத் சமரவிக்ரம, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குலசிங்கம் திலீபன், குமார வெல்கம, மஹிந்த ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, பியால் நிஷாந்த டி சில்வா,அத்துரலியே ரத்தின தேரர், ரோஹித அபேகுணவர்தன, எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன், விதுர விக்கிரமநாயக்க, விமல் வீரவன்ச மற்றும் யாதாமினி குணவர்தன ஆகியோரை தமது கல்வித்தகமைகளை சமர்ப்பிக்கவில்லை.
தரவுகளின்படி 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின்; உயர் கல்வித் தகுதியாக , கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை என இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த உயர்தரத்தை தமது உயர் கல்வித் தகைமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சிலர் உயர்தரம் வரை என்று குறிப்பிட்டுள்ளதால், அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றதை உறுதிப்படுத்த முடியவில்லை.
23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிப்ளோமாக்களை தங்களின் மிக உயர்ந்த கல்வித் தகுதியாக பட்டியலிட்டுள்ளனர்.
70 பேர் தாம், இளங்கலை பட்டதாரிகள் அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என்று கூறியுள்ளனர்.
இணையத்தளத்தில் உள்ள தரவுகளின்படி, 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதுகலைப் பட்டங்களை தங்களின் மிக உயர்ந்த கல்வித் தகுதியாகக் கூறியுள்ளனர்.
15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் பட்டத்தை தங்களின் உயர்ந்த கல்வித் தகுதியாகக் குறிப்பிட்டுள்ளனர்.



