மலையக குடியிருப்பொன்றில் தீ விபத்து: 12 வீடுகள் முற்றாக சேதம்

தலவாக்கலை மிடில் டிவிசன் நடுக்கணக்கு தோட்ட பிரிவில் நேற்று இரவு 8 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக குறித்த குடியிருப்பில் இருந்த 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீப்பரவல் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் தொழிலாளர்களின் பெறுமதி மிக்க உடைமைகள் உட்பட உடு துணிகள், தளபாடங்கள் அத்தியாவசிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த 12 வீடுகளில் வசித்த சுமார் 47 பேர் உறவினர்களின் வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு தேவையான சமைத்த உணவினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து செயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணத்தினை உறுதி செய்யப்படாத போதிலும் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைக்கும் படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாகவும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



