தொழிலதிபர் தினேஸ் சாப்ஃப்டர் கொலை தொடர்பாக இதுவரை 50 பேர் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்
தொழிலதிபர் தினேஸ் சாப்ஃப்டர் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை காவல்துறையினரும் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேரை விசாரணை செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலரிடம் இரண்டாவது தடவையாக வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தினேஸ் சாஃப்டரின் மனைவியின் வாக்குமூலங்களுக்கு மேலதிகமாக, சாஃப்டரின் வர்த்தக பங்காளிகள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஏனைய 41 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
பொரளை காவல்துறை 8 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சிஐடி விசாரணையில் பலரின் தொலைபேசி விபரங்கள் பெறப்பட்டு, அந்த தொலைபேசி விபரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சந்தேக நபரை அடையாளம் காண பல குழுக்கள் பல்வேறு துறைகளில் விசாரணை நடத்தி வருவதாக தல்துவ கூறியுள்ளார்.
கொலையின் பின்னணியில் நெருங்கிய சகா இருக்கலாம் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், கொலையுடன் நேரடி தொடர்புள்ள சந்தேக நபர், இன்னும் கைது செய்யவோ அல்லது அடையாளம் காணவோ இல்லை என்றும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சாஃப்டரின் மனைவி மற்றும் அவரது செயலாளரின் அறிக்கைகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கருத்துரைத்துள்ள அவர், அவ்வாறான முரண்பாடுகள் இருந்தால், அந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். சில தகவல்கள் நீதிமன்றத்தில் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தினேஸ் சாஃப்டர் பொதுவாக மெய்பாதுகாவலர்கள் இன்றி பயணிக்கும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஸ் சாஃப்டர், ப்ளவர் வீதியில் இருந்து பொரளை மயானத்திற்கு சென்றபோது, மல்லாலசேகர மாவத்தையில் உள்ள உணவகத்தில் சிற்றுண்டிகளை வாங்குவதற்காக நின்ற உணவகத்தில் விசாரணை குழுக்கள் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஃப்டரின் அனைத்து வணிக பரிவர்த்தனைகளும் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன் அவருடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தவர்களும் விசாரிக்கப்படுவதாகவும் காவல்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.




