வயது ஏற ஏற நம் தோற்றம் முதுமையை வெளிப்படுத்தாது இருக்க யாது செய்யலாம்?

#Health #skin
வயது ஏற ஏற நம் தோற்றம் முதுமையை வெளிப்படுத்தாது இருக்க யாது செய்யலாம்?

வயது வர வர நம் உடலும் மனமும் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். இதனால் உடலில் மற்றும் மனதில் மாற்றங்களும் ஏற்பட்டு மாறுபடும்.  ஆனால் பலர் இளமை காலத்திலேயே முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறார்கள்.

மரபியல் காரணங்கள், சூரியக்கதிர்களின் ஆதிக்கம், புகைப் பிடித்தல் போன்றவை அவற்றுக்கு காரணமாக அமையலாம். நமது சருமத்தை பேணிப்பாதுகாப்பதன் மூலம் வயதிற்கு முதிர்ந்த தோற்றத்தினை மாற்றலாம்.

ஆரம்ப நிலையிலேயே ஒருசில அறிகுறிகளை கவனித்து அவற்றை கட்டுப்படுத்தினால் போதுமானது. சரும வறட்சி மற்றும் சரும அரிப்பு போன்றவை முன்கூட்டியே வயதான தோற்றத்துக்கு வழிவகுக்கும் பொதுவான காரணங்கள்.

சருமத்தில் சுருக்கம் மற்றும் வயதான செல்கள் என்பனவற்றை நீக்குவதன் முலம் நாம் இந்த இயல்பை அடையலாம்.

பெரும்பாலும் 50 வயதை எட்டுபவர்களின் சருமத்தில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். முகம் மட்டுமின்றி கை, கால்களிலும் இந்த புள்ளிகள் தென்படும். சூரிய ஒளிக்கதிர்கள் பல ஆண்டுகளாக சருமத்தை பாதிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும்.

வயதாகும்போது சரும வடிவத்தை பராமரிக்க உதவும் புரத பொருளான கொலாஜன் உற்பத்தி குறையும். சருமத்தின் தசையில் தளர்ச்சி ஏற்படும். தூக்கமின்மை, மன அழுத்தம், வாழ்நாள் முழுவதும் சூரிய ஒளி படும்படியான இடத்தில் வேலை பார்ப்பது போன்ற காரணங்களாலும் முன்கூட்டியே முதுமை ஏற்படலாம். அதே வேளை சருமம் கருக்கலாம்.

மற்ற உடல் பாகங்களை விட கைகள்தான் மிக விரைவாக வயதான தோற்றத்திற்கு மாறுகின்றன. ஏனெனில் அவைதான் சூரியனின் பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றன.

தொடர்ச்சியாக சருமத்தில் புற ஊதா கதிர்கள் தாக்கும்போது சருமத்தில் உள்ள எலாஸ்டின் என்னும் புரதப் பொருள் சேதமடையக்கூடும். இதன் விளைவாக சுருக்கங்கள், கையில் நிறமாற்றம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகளை கவனத்தில் கொண்டு சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நாம் வயதான தோற்றத்திற்காளாகாமல் இருக்கலாம்.