தினமும் கணவன்- மனைவி ஒருவரையொருவர் பாராட்டிகொள்ளவது எப்படி?

#Lifestyle #husband
தினமும் கணவன்- மனைவி ஒருவரையொருவர் பாராட்டிகொள்ளவது எப்படி?

ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி பரஸ்பர பாராட்டுக்களை தெரிவிப்பதனால் அவர்களின் இல்வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சி கரமானதாக அமைந்திருக்கும்.

கணவர் மனைவியை பாராட்டுவதும், மனைவி கணவரை பாராட்டுவதும் குடும்ப உறவை வலுப்படுத்தும். அந்த பாராட்டு பலவிதங்களில் இருவரையும் உற்சாகப்படுத்தும்.

உடை அலங்காரம்:

அணிந்திருக்கும் உடை, சிகை அலங்காரம் போன்ற விஷயங்களில் கணவரின் உண்மை அபிப்பிராயத்தை தெரிந்து கொள்வதற்கு மனைவி விரும்புவார். நேர்த்தியான தனது உடை அலங்காரத்தை கணவர் பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.

மனைவி உடை அல்லது சிகை அலங்காரத்தில் முன்பை விட அழகாக இருந்தால் தயங்காமல் பாராட்டலாம். இதுபோன்ற பாராட்டு மனைவியை மகிழ்விக்கும். மனைவியும் கணவரின் உடை, அலங்காரம் போன்ற விஷயத்தில் மாற்றங்களை எதிர்பார்ப்பார். மனைவி சொல்லும் கருத்தை கணவர் ஆமோதிக்க வேண்டும். அதனை பின்பற்றி தனது தோற்றத்தில் மாற்றத்தை உணர்ந்தால் மனைவியை தயங்காமல் பாராட்டவும் வேண்டும்.

பொறுப்பு:

கணவர்மார்கள் தொழில் மற்றும் சமூக பொறுப்புள்ள பணிகளை விரும்பி செய்யும்போது தாராளமாக பாராட்ட வேண்டும். அதுவும் பெண்கள் பாராட்டினால் அதன் மதிப்பே தனித்துவமானது. குறிப்பாக கணவர் மேற்கொள்ளும் சமூக சேவையை பாராட்டவேண்டிய பொறுப்பு மனைவிக்கு இருக்கிறது.

அலுவலகங்களில் மற்றவர்களோடு சேர்ந்து சமூக பணிகளில் பங்கேற்பது, நெருக்கடியான சூழலில் மற்றவர்களின் பணியை பொறுப்பெடுத்து செய்வது, மற்றவர்களுக்கு தெரியாத வேலையை கற்றுக்கொடுப்பது, அறிமுகமில்லாத நபர்களுக்கு உதவுவது போன்ற செயல்களை ஆண்கள் மனமுவந்து செய்வார்கள்.

அந்த சமயத்தில் மனைவி, கணவர் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது. கணவரின் சுபாவத்தை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும். பாராட்டி கவுரவிக்க வேண்டும்.

பேச்சு:

குடும்ப விஷயங்களில் முக்கிய முடிவுகளை கணவர்-மனைவி இருவரும் சேர்ந்து எடுப்பதே சிறப்பானது. இக்கட்டான சூழலில் கணவர் எடுக்கும் முடிவுக்கு மனைவி ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் நன்மை ஏற்படும்போது கணவரை மனமுவந்து பாராட்ட வேண்டும். 

தனித்திறன்:

செய்யும் தொழில், வியாபாரம், வேலை இவைகளை கடந்து வேறு ஏதேனும் தனித்திறன்கள் கணவரிடம் இருந்தால் அதை நிச்சயம் பாராட்ட வேண்டும். அது மேலும் அவரை உற்சாகத்துடன் செயல்பட தூண்டும். விளையாட்டு, சங்கீதம், ஓவியம், கலை போன்ற தனித்திறன்களை பாராட்டுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி உற்சாகமாக பயணிப்பார்கள்.

இளமை:

பொதுவாக கணவர்மார்கள் ஆடை, அலங்கார விஷயத்தில் ஆர்வம் கொள்ள மாட்டார்கள். ‘இன்று நீங்கள் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்’ என்று கணவரிடம் கூறி பாருங்கள். வயதை மீறிய உற்சாகம் வெளிப்பட்டுவிடும். ஆடை, அலங்காரம் மீது தினமும் கவனம் பதிக்க தொடங்கிவிடுவார்கள்.

நம்பிக்கை:

நெருக்கடியான சூழ்நிலையில், ‘நான் உங்களை நம்புகிறேன். உங்களால் நிச்சயம் நினைப்பதை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றும்  கணவர் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு பக்கபலமாக இருந்தாலே போதுமானது.

குடும்ப பாசம்:

குடும்ப உறுப்பினர்கள் மீது அன்பும், பாசமும் கொண்டிருப்பது ஆண்களின் இயல்பான சுபாவத்திலேயே கலந்திருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். சிலர் வெளிப்படுத்துவதற்கு தயங்குவார்கள். பொதுவாகவே ஆண்கள் குடும் பத்தை அனுசரித்து வாழும் வழக்கம் கொண்டவர்கள். அதற்காக சில சமயத்தில் கடுமையாக நடந்து கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் அதை உணர்ந்தும், ஏற்றுக்கொண்டும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டாலும் மனைவி கணவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். 

இவ்வாறு கணவன் மனைவி அன்யோன்மாக வாழ்ந்தால் வாழ்க்கை எங்கே உங்களுக்கு கசக்கப்போகிறது.