முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது - வ. கெளதமன் கோரிக்கை

Prasu
3 years ago
முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது - வ. கெளதமன் கோரிக்கை

32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் பலமுறை விடுதலை செய்ய சொல்லியும் கேளாமல் அதிகாரத்தை கையில் வைத்திருந்த கவர்னர்கள் புரோகித், ஆர். என். இரவி போன்றோர் நீதியை நிலை நாட்டாமல் காலம் தாழ்த்திவிட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றமே தனது கையிலெடுத்து முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய அறுவரையும் விடுதலை செய்திருப்பது வரவேற்பிற்குரியது. 

விடுதலைப் பெற்றவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள்  அதிலுள்ள நால்வரை மட்டும் தனிமைப்படுத்தி வெளிநாட்டவர்கள் என்று காரணம் கூறி மீண்டும்  திருச்ச்சி சிறப்பு முகாமில் அங்குள்ள கைதிகளை கூட சந்திக்க விடாமல் அறைகளின் ஜன்னல், கதவுகளை கூட அடைத்து பூட்டி சிறை வைத்திருப்பதென்பது ஒரு கொடூர வன்முறையாகும். 

இத்தகைய ஈவு இரக்கமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு தமிழ்நாடு அரசு உடனடியாக அவர்களை திறந்த வெளிக்குள் அனுமதித்து அவர்கள் விரும்புகிற அயல்நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள்  நால்வரையும் இலங்கக்கு விரைவில் அனுப்ப இருப்பதாக நேற்று  தெரிவிதிருப்பது கடும் அதிர்ச்சியளித்தது. தமிழ்நாடு அரசும் காவல் துறையும் முடிவு செய்யாமல் இப்படி ஒரு அறிவிப்பை ஆட்சியர் அவர்கள் வெளியிடுவதற்கு வாய்ப்பே இல்லை. 

மேற்கண்ட நால்வரின் விருப்பம் இல்லாமல் சட்டம் ஒழுங்கு சரியில்லாத இன்றைய இலங்கைக்கு அனுப்புவது என்பது மீண்டும் அவர்களை கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பான செயல் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை, அழகிரி ஆகியோரின் அறிக்கைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே இருக்கிறது. 

விடுதலை செய்தது தவறு என்றும் தமிழ்நாடு அரசு கருணை காட்டாமல் அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்வதும் 32 ஆண்டுகள் கடும் தண்டனையை அனுபவித்து வந்து விட்ட பிறகும்கூட காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் ஆகப் பெரும் வித்தியாசம் இல்லை என்பதோடு  தமிழர்களின் மீதுள்ள அவர்களின் வன்மம் என்றும் குறையவே குறையாது என்பதையே காட்டுகிறது என்பதனை மானமுள்ள தமிழினம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைக்குப் பிறகு தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது நேர்மையற்ற கூட்டங்களின் வெற்று கூச்சல்களுக்கு மதிப்பளித்து நால்வரின் விருப்பம் இல்லாமல் இலங்கைக்கு அனுப்பினாலும் உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒட்டு மொத்த தமிழர்களின மிகக் கடுமையான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4