இன்றைய வேத வசனம் 31.10.2022: ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாமிச இச்சைகளை விட்டு விலகுங்கள்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 31.10.2022: ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாமிச இச்சைகளை விட்டு விலகுங்கள்

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாமிச இச்சைகளை விட்டு விலகுங்கள். பேதுரு 2:11.

கிறிஸ்தவர்கள் அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிறார்கள் என்று பேதுரு இங்கு நினைவு படுத்துகிறார். 

எக்காலத்திலும் இல்லாதபடி இந்நாட்களில் இந்த நினைப்பூட்டதல் மிகவும் அவசியமாயிருக்கிறது.

பரதேசிகள் என்போர் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குப் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் ஆவர்.

அவர்கள் பயணம் செய்கிற நாடு அவர்களுடையதன்று. அவர்கள் அன்னியநாட்டினர் அவர்கள் எந்த நாட்டை நோக்கி செல்கின்றனரோ அதுவே அவர்களுடைய சொந்த நாடாகும்.
கூடாரம் ஒரு பயணத்தின் அடையாளமாக இருக்கிறது. ஈசாக்கோடும், யாக்கோப்போடும், ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று நாம் படிக்கும்போது, கானான் தேசம் அவனுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.

அதனை அவன் அந்நிய நாடாகவே எண்ணினான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்த” கரணத்தினால் அவன் நிரந்தரமற்ற கூடாரங்களில் வசித்தான். (#எபிரேயர்.11:19). 
ஆகவே பரதேசி ஒரிடத்தில் தரித்திருப்பதில்லை. அவன் தொடர்ந்து பயணம் செய்கிறவனாக இருக்கிறான்.

தொலைதூரம் பயணம் செய்கிறவனாயிருப்பதினால், பளுவான எதையும் அவன் சுமந்து செல்கிறதில்லை. 

பொருட்செல்வத்தின் மிகுதியால் உண்டாகும் பெருஞ்சுமையால் தன்னை அவன் பாரமாக்கிக் கொள்கிறதில்லை. 

தேவையற்ற பொருட்களை அவனால் எடுத்துச் செல்லமுடியாது. அவனுடைய பயணத்தைத் தடைசெய்யும் எந்தப் பொருளையும் அவன் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

ஒரு பரதேசியின் மற்றொரு சிறப்பு அம்சம் யாதெனில், அவனைச் சூழ வீடுகளில் குடியிருக்கும் மற்றவர்களியிருந்து அவன் வேறுபட்டவனாக இருக்கிறான் என்பதேயாகும்.

அவர்களுடைய வாழ்க்கைப் பாணி, பழக்கவழக்கங்கள், மற்றும் தொழுதுகொள்ளும் முறை ஆகியவற்றை அவன் பின்பற்றுவதில்லை.

கிறிஸ்தவப் பணியைப் பொருத்தமட்டில், பேதுருவின் எச்சரிப்புக்கு அவன் செவி கொடுத்து, ‘ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை” விட்டு விலக வேண்டும். சூழ்நிலைக்கேற்ப தனது நடத்தையை அவன் மாற்றிக் கொள்கிறதில்லை.

அவன் உலகத்தில் இருந்தாலும், அவன் உலகத்திற்கு உரியவனல்ல.
அந்நிய நாட்டின் வழியாகக் கடந்து செல்லுகிறபோது, அந்நாட்டில் மேலானதாகக் கருதப்படுவதையும், முக்கியத்துவம் வாய்ந்தது என்று எண்ணப்படுவதையும் அவன் நாடுவதில்லை.

அந்தப் பரதேசி பகைவருடைய நாட்டின் வழியாகப் பயணம் செய்கிறபோது, அத்தேச மக்களோடு தோழமை கொள்வதில்லை. அவ்வாறு தோழமை பாராட்டுவது தனது தலைவருக்கு உண்மையற்று நடந்துகொள்வதாக அமைந்துவிடும். தனது நோக்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்வதாகவும் காணப்படும்.

கிறிஸ்தவனாகிய பரதேசி பகைஞருடைய நாட்டில் (உலகம்) பயணம் செய்கிறவனாகவே இருக்கிறான். 

நமது தலைவருக்கு இந்த உலகம் சிலுவையையும், கல்லறையையுமே கொடுத்தது. அப்படிப்பட்ட உலகத்தோடு நட்பு பாராட்டுவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒப்பாகும்.

இந்த உலகத்தோடு கட்டப்பட்ட நிலையிருந்து சிலுவை நம்மைக் கட்டவிழ்த்திருக்கிறது. உலகத்தால் புகழப்படுவதை நாம் விரும்புவதில்லை. அது குற்றப்படுத்துவதைப் பொருட்படுத்துவதில்லை.

ஒவ்வொரு நாள் பயணமும் தன்னைத் தனது சொந்த வீட்டின் (பரலோகத்தின்) அருகாமைக்குக் கொண்டுபோகிறது என்னும் அறிவு அந்தப் பரதேசி தனது பயணத்தைத் தொடருவதற்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.

மேலும் அவன் தனது இலக்கை அடைந்தபிறகு, வழியில் அவன் சந்தித்த இடுக்கண்களையும், ஆபத்துக்களையும், மிகவிரைவில் மறந்து போவான் என்பதையும் அவன் அறிந்திருக்கிறான்.
எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகத்திற்கு உரியவர்கள் அல்ல, நாம் ஒரு பரதேசிகள் என்பதை உணர்ந்து, தேவ சாயலை தரித்துக்கொள்வோம்..

ஆமென்!!! அல்லேலூயா!!