இன்றைய வேத வசனம் 14.10.2022: நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 14.10.2022: நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்

பாடுகளை யாருமே விரும்புவதில்லை. ஆனாலும் பாடுகளை வாழ்க்கையில் காணாதவர்கள் யாருமே இல்லை. 

பாடுகளின் பாதையில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏதாவது ஒரு நிலையில் எல்லோருக்கும் வரவே செய்கின்றது.

பாடுகள் பலவிதக் காரணங்களுக்காக தேவனால் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகின்றது.

1. சில பாடுகள் தேவன் நம்முடைய வாழ்வில் தேவை என்பதை உணர்த்துவதற்காக வருகின்றன.

 2. சில பாடுகள் நம்முடைய தவறுகளை நாம் உணர்ந்து கொள்வதற்காக வருகின்றன.

 3. சில பாடுகள் தேவனோடு நமக்குள்ள உறவை பலப்படுத்து வதற்காக வருகின்றன.

 4. சில பாடுகள் தேவன் நம்மோடிருப்பதை அதிகமாக நாம் உணர்ந்து உறுதிப்படும்படியாக வருகின்றன.

 5. சில பாடுகள் நம்மை உயர்ந்த நிலைகளுக்காகத் தகுதிப் படுத்தும்படி வருகின்றன.

 6. சில பாடுகள் நம்மிடம் தேவன் இருப்பதை பிறர் கண்டு விசுவாசிக்கும் படி வருகின்றன.

 7. சில பாடுகள் நம்முடைய அற்ப நிலையை நாம் உணர்ந்து என்றும் தாழ்மையுடன் வாழ வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும்படி வருகின்றன.

இது போன்ற பல நோக்கங்களுக்காகப் பாடுகள் நம் வாழ்க்கையில் வரலாம். 

ஆனால், தேவன் நம்மோடிருந்தால் அந்தப் பாடுகளை வெற்றியாகக் கடந்து செல்லும் தேவ வல்லமை நம்மிடம் நிச்சயம் செயல்படும்.

யோபு, யோசேப்பு, தாவீது, பவுல் போன்ற தேவ மனிதர்களோடு தேவன் இருந்தார். எனவேதான் எத்தகைய துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தும் அவர்கள் வீழ்ச்சியுறாமல் எழுச்சியுடன் எழுந்து நின்று தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

பாடுகளின் பாதையை மனஞ்சோர்ந்து போகாமல் பக்குவத்துடனும், துணியுடனும் கடந்து செல்லும் கிருபையைத் தேவன் உங்களுக்கு தருவாராக. ஆமென்!

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் (சங்கீதம் 23:4)

நாங்கள் எப்பக்கதிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் மடிந்து போகிறதில்லை. (கொரிந்தியர் 4:8,9)