இன்றைய வேத வசனம் 09.10.2022: உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 09.10.2022: உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது

நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். (2 இராஜாக்கள் 4:9)

எலிசா தீர்க்கதரிசி சூனேமுக்குப் போயிருந்தபோது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ எலிசாவை தன் வீட்டில் போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்;

அந்தப்படியே, எலிசா அந்த ஊருக்கு வரும்போது எல்லாம் அந்த ஸ்திரீயின் வீட்டில் தங்குவது வழக்கம். இவ்வாறாக பல நாட்கள் கவனித்த பிறகு, இவர் "பரிசுத்தவான்" என்ற முடிவுக்கு வந்தாள் அந்த ஸ்திரி.

எலிசா தன் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு நாளும் அவனை உற்று கவனித்து, அவனுடைய சொல், செயல், நடத்தை என்று எல்லாவற்றிலும் பரிசுத்தத்தை கண்டாள். எனவே பரிசுத்தவான் என்று சாட்சி கொடுத்தாள்.
இன்று நம்மை கவனித்து பார்க்கிறவர்கள் நம்மை குறித்து கொடுக்கும் சாட்சிகள் என்ன? நம்மை அடிக்கடி சந்திப்பவர்கள், நம்மோடு கூட சேர்ந்து வாழ்பவர்கள், இன்னும் நம்மோடு நெருங்கி வாழும் உறவுகள் நம்மை குறித்து கொடுக்கும் சாட்சிகள் என்ன?

அவர்கள் நம்மை சுறுசுறுப்பானவர்கள், பேச்சு திறன் உள்ளவர்கள், வேடிக்கையானவர்கள் என்று மாத்திரமே காண்கிறார்களா? அல்லது நம்மை பரிசுத்தவான்களாக காண்கிறார்களா?

நம் இருதயத்தில் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ, அதை போலவே மாறி விடுகிறோம் என்ற பழமொழி உண்மையானது தான்.

அப்படியே நாம் அனைவரும் பரிசுத்தமாய் மாற தீராத ஏக்கம் கொண்டு ஒரு அடி எடுத்து வைத்தால், அந்த ஏக்கத்தை காணும் தேவன் நாம் விரும்பிய வண்ணமாகவே அவர் நம்மை மாற்றுவார்!

நாம் பரிசுத்தமாய் வாழ விரும்பாத காரணம், நம் இருதயத்தின் ஏக்கம் வேறு ஏதோ ஒன்றின் மீது இருக்கிறது என்று அர்த்தம்.

எலிசா எங்கெல்லாம் சென்று, யாரையெல்லாம் சந்தித்தாரோ அவர்கள் எல்லாரிடத்திலும் இவர் பரிசுத்தவான் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.

ஜனங்கள் இவர் செய்தியை மறந்திருக்கலாம், ஆனால், இவர் வாழ்ந்த பரிசுத்த வாழ்க்கையை அவர்களால் மறக்க முடியவில்லை!

நாம் வாழும் இந்த நாட்டிலே, கிறிஸ்துவை அறியாத நண்பர்கள் நம் வாழ்க்கையில் பரிசுத்தத்தை காணாவிட்டால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் எப்படி ஈர்க்கப்பட முடியும்?

ஆகவே, நாம் தேவ சமூகத்தில் முகங்குப்புற விழுந்து, இரக்கத்திற்காய், பரிசுத்தத்திற்காய் தேவனிடத்தில் மன்றாடுவோம்! ஆமென்!!!

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:16)