யாழில் வீட்டுக்குள் நுழைந்த கும்பலால் தாய் மற்றும் மகனுக்கு நேர்ந்த கொடூரம்

யாழில் இன்று பகல் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டிலிருந்த தாய் மற்றும் மகனை கட்டிவைத்து கொடூரமாக தாக்கியதுடன், பணம், பொருட்களை கொள்ளையடித்தச் சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாவற்குழி மேற்கு - சித்தி விநாயகர் கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை முறிந்துள்ளதுடன், 42 வயதான தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாயும் மகனும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



