இன்றைய வேத வசனம் 30.09.2022: உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 30.09.2022:  உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்

ஒரு கிளி இருந்துச்சாம், அது எப்பவுமே எல்லாரையும் கொத்திக் கொண்டே இருக்குமாம். இதனால அந்த கிளியின் எஜமான் அந்த கிளியிடம் இனி நீ யாரையும் கொத்த கூடாது யாரையும் காயப்படுத்த கூடாது அப்படினு சொல்லி காலை முதல் மாலை வரை இனி யாரையும் கொத்த மாட்டேன் என சொல்ல சொல்லி பயிற்சி கொடுத்தாராம்.

கிளியும் காலை முதல் இரவு வரை நான் யாரையும் கொதத்த மாட்டேன் என சொல்லிக் கொண்டே இருந்ததாம். ஆறு மாதங்களாய் இப்படி அந்த கிளிக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாம்.

ஆறு மாதங்களுக்குப் பின்பு அந்த எஜமானர், ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்து விட்டோம் அப்படின்னுட்டு அந்தக் கிளி பக்கத்தில் போய் கிளியை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தாராம்.

அந்த கிளி அவருடைய முகத்தில் கொத்தி விட்டதாம் அவர் மருத்துவமனைக்கு போக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதாம்.

இதே மாதிரி தான் நம் நாவும் கூட, பைபிள் சொல்லுது நம்முடைய வார்த்தை இருதயத்தில் இருந்து புறப்படுகிறதாம்.

அதனால் தான் நம் இருதயம் அழுக்கால் பாவத்தால் நிறைந்திருக்கும்போது இருதயத்திலிருந்து புறப்பட்டு வாயினால் வரும் வார்த்தைகளும் கடுமையான சொற்களாகத்தான் இருக்கும்.

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வார்த்தைகளாகத்தான் இருக்கும் அப்படின்னு பைபிள் வசனம் சொல்லுது.

மத்தேயு 15:18,19
வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
அதனால் நாம் வார்த்தைகளை கையாளும் போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களை எப்போதும் பேசக்கூடாது.

நம்முடைய வார்த்தைகளை கவனமாக யோசித்து பேசும் போது மற்றவர்களுக்கு ஆசிர்வாதத்தை கொண்டு வருகிற வார்த்தைகளாய் இருக்கும்.

அந்த கிளிக்கு யாரையும் கொத்த கூடாதுனு மூளையில் பதிந்து இருந்தது. ஆனால் அந்த கிளி என்ன பண்ணினது என்றால் தன் இருதயத்தின் இயல்பை தான் வெளிப்படுத்தியது.

அதே மாதிரி தான் நாமும் கூட, சில சமயங்களில் கெட்ட வார்த்தைகள் பேசக் கூடாது கடும் சொற்கள் பேசக்கூடாது அப்படின்னு நினைக்கிறோம், ஆனால் நம் இருதயத்தில் பாவம் நிறைந்திருப்பதால் நம் நாவில் இருந்து தவறான வார்த்தைகள் வெளிப்பட்டுவிடுகிறது.

இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். (மத்தேயு 12:34)
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், தேவனுடைய வசனத்தால் நம்முடைய இருதயத்தை நிரப்பும்போது, ஆண்டவருடைய வார்த்தைகளை எப்போதுமே தியானிக்கும் போதும் நாம் நல்ல வார்த்தைகளை வெளிப்படுத்த முடியும்!!

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (யாக்கோபு 4:8)
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலிப்பியர் 4:7)

ஆமென்..